திருநாளைப் போற்றுவோம்

14 Jan 2022 2:38 am









தைத் திங்கள் முதல்நாளின் திருவிழா!
தமிழர் திருநாள் பூத்தது புது மலராய்;
புத்தரிசி புது மஞ்சள், கொத்தாம் இஞ்சி;
தித்திக்கும் கரும்பு, புத்தாடையென
புத்தாண்டில் எத்திக்கும் எதிரொலிக்கும் இன்பம்
“பொங்கலோ பொங்கல்” 
“பொங்கலோ பொங்கல்”!
சொத்தான நம் செந்தமிழில் 
முழங்கிடும் வேளை இது!

கருவில் தொடங்கி கல்லறையில் முற்றுப் பெரும் மனித வாழ்வின் நெடும் பயணம்; வாழ்க்கையின் வழித்தடம்; வரலாற்றின் தொடர்ச்சி என அனைத்தையும் அளந்து காட்டும் காலக் கருவியே ஓரை, நாள், வாரம், திங்கள், ஆண்டு என்பன ஆகும். அண்டத்தில் ஆங்காங்கே சுழன்று கொண்டிருக்கும் கோள்கள், விண்மீன்கள் வெளிப்படுத்தும் இயற்கை இயல்புகளுக்கொப்ப ஆண்டு, திங்கள், வாரம், நாள், நாழிகை என காலத்தின் வகைகளை வகுத்துக் கொண்டு பகுத்தறிவின் பயனால் மாற்றங்களைக் கண்ட ஒரு விலங்கு மனித விலங்கு மட்டுமே.

தை பிறந்தது; விடிந்தும் விடியாதது போன்று முதிர்ந்தும் கடந்தும் போனது ஓர் ஆண்டு! மலைகள், கடல்கள், காடுகள், நதிகள், வயல் வெளிகள் என நாடோடிகளாய் வாழ்ந்த மனித இனம் வரலாற்றின் தொடர்ச்சியில் வளர்ச்சியில் அறிவின் முதிர்ச்சியில் மொழி, இனம், பண்பாடு, நாகரிகம், நாடு, எல்லை, குமுகம், சட்டம், ஆட்சிமுறை என வகைப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொண்டது.

வளர்ந்த பின்பு பரந்தும் பிரிந்தும் வாழ்கின்ற சூழலில்….

“குலமும் ஒன்றே குடியும் ஒன்றே”
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழிலில் வேற்றுமை யான்?”
“எல்லாரும் இன்புற்றிருக்க அல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே”
“வாடியப் பயிரைக் கண்டபொதெல்லாம் வாடிடும் என் மனம்” “காக்கைக் குருவி எங்கள் சாதி பெரும் காடும் மலையும் எங்கள் கூட்டம்”
“போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”
“அறம் செய விரும்பு; ஆறுவது சினம்”
“சிந்தையின் நிறைவே செல்வம்”
“அன்பின் வழியது உயிர்நிலை”
“கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு”

என ஒப்பற்ற பல சொற்கோவைகளை உலகுக்களித்து நம் இனத்தின் அகம் காட்டி செந்தமிழின் முகம் காட்டி நல் எண்ணங்களின் நாற்றாங்காலாய் விளங்கியது தமிழினம் ஆகும்.

உயிரையும் உணர்வையும் வளர்ப்பது தமிழே என்பது புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் கூற்று!

வையமெல்லாம் போற்ற வளமுடன் வனப்புடன் வானளாவ வாழ்ந்து பசும்பொன்னைத் தோண்டி பாருக்கெல்லாம் வழங்கிய நம் இனம் இன்று விசும்பியும் விழி பிதுங்கியும் நிற்பவர்களாய் காட்சியளிக்கின்றனர். பிழைக்கத் தெரிந்த பிறவிகள் இங்கே எப்படியெல்லாமோ பிழைத்துக் கொண்டிருக்க உழைக்கத் தெரிந்த அளவுக்கு உழைப்பிற்கேற்ப தழைக்கத் தெரியாமால் உலகெங்கும் தவித்துக் கொண்டிருக்கும் இனமாக தமிழினம் விளங்குகின்றது.

அறம் பாடிய அவ்வையும், நன்னெறி வாழ்வின் அடித்தளம் அமைத்த திருவள்ளுவரும், தொல்மரபின் தொடர்ச்சியை எடுத்தியம்பி இலக்கணம் வகுத்த தொல்காப்பியனும் நம் அரசியல் அறிஞர்கள்!

குடிமக்களின் விருப்பத்திற்கிணங்க குடவோலை சீட்டு வைத்து மக்களாட்சி முறையை வகுத்த மதுராந்தகன் என்ற தமிழ் மன்னன் ஒரு அரசியல் சிந்தனையாளன்! சாதி மதம் சமுகக் கேடுகளை அகற்றச் சலிப்பின்றி உழைத்த மாமனிதன் தந்தை பெரியார் ஒரு சமுக அறிவியலாளன்! தமிழ் நாடு தந்த நம் அண்ணா ஓர் அணையா விளக்கு! பாவாணரும், பெருஞ்சித்திரனாரும் நம் படைத் தளபதிகள்!

எனினும் சனநாயத்தின் ஊற்றாக விளங்கி புவியோர்க்குப் புதிய சிந்தனையை தாய்ப்பாலாய் ஊற்றி வளர்த்த தமிழினம் தற்போது தன் மொழி, இன, பண்பாட்டு இறைமைக்காவும், உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது.

ஒப்பிலாதது ஒருமைப்பாடு”; “ஒருதாய் மக்கள்” “ ஒரே நாடு” என்றெல்லாம் உரக்க ஒலிக்கும் இந்திய நாட்டில் தான் தமிழினம் வேற்று நாட்டவரைப் போல வேம்பாய் வெறுக்கப் படும் வேதனைக்குரிய நிலை; தோண்டக் கிடைக்கும் தொன்மைத் தமிழரின் மரபுகளும், பண்பாட்டு அடையாளங்களும் மொழியின் வளமையும், வரலாற்றுச் சுவடுகளும் வடவர்களால் திட்டமிட்டே சிறுகச் சிறுக அழித்தொழிக்கப் பட்டு வருகின்றன.

தமிழர் சிலரின் பதவிப் பித்தும் பல்லிளிக்கும் போக்கும் பொருள் மோகமும் நுகர்வுக் கலாச்சாரத்தின் முற்றுகையும் தமிழரின் மருத நில வேளாண்மைக் கூறுகளை வேரறுக்கச் செய்து விட்டன. பொருள் மயக்கம் பெருகி குமுகாயத்தில் வறுமைக்கும் வளமைக்கும் உள்ள இடைவெளியை அகலப் படுத்தி விட்டன. தமிழர்களின் வெற்று உணர்ச்சிகளும் வெறுமைக் கிளர்ச்சிகளும் தமிழ்ப் பகைவர்கள் பலரின் பாதகச் செயல்களுக்கு பல்லக்குத் தூக்குவதாய் அமைந்துள்ளன.

சனநாயகப் போர்வையில் வடவர்களின் சாதியும் மதமும் சனாதன வெறியும் கோலோச்சுகின்றன. நாட்டின் இறையாண்மையை அரித்தொழிக்கும் கரையான்களின் எண்ணிக்கை பரந்தும் விரிந்தும் வருகிறது. கெடுமதியாளர்களின் விருப்பங்களுக்கொப்ப மரபுகளை சட்டங்கள் மீறுகின்றன; சட்டங்களை சில வேளை மரபுகள் மீறுகின்றன. மூடநம்பிக்கைகளுக்கு முலாம் பூசப்பட்டு தனிமனித நம்பிக்கையாகவும் பாரதப் பண்பாடு எனவும் பகிரப்படுகின்றன. நயன்மை மன்றங்கள் மதம்சார் விடயங்களில் வாய் மூடிகளாகவும், முடவர்களாகவும் உள்ளன!

தமிழ் நாட்டு கட்சி அரசியலில் கால்களைத் தேடும் கயமையும் மடமையும் பொய்யும் புனைவும் வழுவும் வழிபாடுகளுமே நஞ்சுக்கு நிகராய் மிஞ்சியும் எஞ்சியும் இருக்கின்றன. வாக்குச் சீட்டுகள் சிலருக்கு வாய்ப்பளித்த போதெல்லாம் வழுவும் வருவாயும் பெருகின. தமிழர் உரிமையும் உணர்வும் அருகின. ஈழத் தமிழரின் இறைமை அழிந்தது. இன வலிமை ஒழிந்தது. வடக்கரும் வால்பிடிக்கும் தீயர்களின் கீழ்ச் செயலும் வளமான நம் தமிழ் மண்ணில் வாடும் பயிரையும் மேய்ந்து வறட்சியையே ஈந்தன.

இனியும் விழிப்பில்லையெனில் விடியல் என்பது தமிழினத்திற்கு வெறும் கனவாகவே மாறிவிடும். ஏற்கனவே இழந்தது ஏராளம். இளந்தலைமுறையின் எதிர்காலம் இனியும் கேள்விக்குரியதாகி விட வேண்டாம். தமிழ் மொழியின் காப்பும், தமிழர் உரிமை மீட்பும் நம் மூச்சுக் காற்றின் முகாமையாகட்டும்!

நம் வரலாற்றுச் சீர்மைகளை வாழ்க்கையின் வடிவங்களாக மாற்ற வேண்டிய தருணம் இது. சிந்தைத் தெளிவுடன் சிற்றிளங்காளைகள் களத்தில் இறங்க வேண்டிய காலம் இது. மாணவ மணிகளே உங்களுக்குக் கடமை காத்திருக்கிறது. மக்கள் வலிமை மட்டுமே இனி மாற்றத்தை முன்னெடுக்க முடியும். நுழைவுத் தேர்வுகள் எனும் பெயரில் நுண்மான் நுழைபுலம் மிக்க மாணவர்களின் கனவுகள் காயடிக்கப் படுக்கப்பட்டு கலைக்கப் படுகின்றன.

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல் தமிழனின் கட்டமைப்புகளில் வட இந்தியரின் வல்லாண்மை மேலோங்குகிறது! தேளின் கொடுக்காய் கொட்டி ஒளிவோரை தெரிந்து கொண்டு செயலாற்ற உறுதி பூணுவோம். தூக்கமா இன்னும்? தட்டி எழுப்புங்கள்! துயில்வோரே எழுந்திருங்கள்! இனியும் கண் மூடியிருந்தால் உன்னை மண் மூடும்! இது திண்ணம்!

தமிழுக்கும் அமுதென்று பேர்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்! என்ற புரட்சிக் கவிஞனின் புகழ் மிக்க வரிகள் நம் குருதியில் கலந்து பழந்தமிழர் கலை ஒழுக்கம் பண்பாடு காக்கும் பறையாய் விண்ணதிர முழங்கட்டும்.

இனமும் மொழியும் உடலும் உயிரும் போன்றதாகும்.

கடந்து போன ஆண்டின் கசடுகளை மறந்து புத்தாண்டில் புதுப் பொலிவுடன் நல்லன விளைந்திட நம்பிக்கையுடன் களம் காண்போம். நல்வினைகள் நமக்கு நாற்றாங் கால்களாகட்டும். இருட்டறையில் இனியும் தமிழ் மக்கள் இருப்பது தீதாகும். நம் ஒற்றுமையினைச் சிதைக்கும் கூறுகளைச் சிதைப்போம்!̀ முரண்கள் தவிர்த்து அரண்கள் அமைப்போம்!

அழகு தமிழின் அருஞ்சுவை அருந்தி அறிவியல் கண்கொண்டு அறிவாற்றல் பொங்கும் அன்பை விதைப்போம். உறவுகளை வளர்ப்போம்! ஒற்றுமையை விதைப்போம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வென உணர்வோம்! உரிமைகளைக் காப்போம்!
இனி அடிமைத் தளை அறுத்து விடுதலை கொள்ள ஏற்ற செயல் செய்திடுவோம்! சூளுரைப்போம்!

இளங்காலை திரை நீரில் முகிழ்க்கும் கதிரவன் வரவினில் புத்தரிசிப் பொங்கலிட்டு முழங்குக பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

கனியனைய என் தமிழ்ச் சொந்தங்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

வாழ்க தமிழ்! தமிழும் நாமும் வேறல்ல!
தமிழே நம் வேர்!

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல். - (திருக்குறள்)

கனிவுடன்,
சு.குமணராசன்
மும்பை.
நாள்: தை – க –
திருவள்ளுவராண்டு உ0ருங (14-01-2022)
தொடர்புக்கு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives